நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஓர் இடம்... மன்னார் அமுதனின் கவிதைகள், சிறுகதைகள், கல்வி, சமூக, இலக்கியக் கட்டுரைகளின் காப்பகம் *மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-1 ** மன்னார் அமுதனின் கவிதைகள் வலைப்பூ-2

திங்கள், மார்ச் 11, 2013

இராத்தங்காத ஓர் இரவு



ஏழை குழந்தைக்கு
உணவு

எதிர்வீட்டு கிழவிக்கு
இளைப்பென

எதுவந்தாலும்
எங்கேனும் சுற்றி
இறுதியில் வருவது
அவளிடம் தான்

ஊரே உலகமாயிற்று
அவளுக்கு
உலகமே அவளாயிற்று
ஊருக்கு

எது எப்படியாயினும்
எல்லோர் வீட்டிலும்
பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்

அவள் இராத்தங்காத
அந்த ஒரிரவைப் பற்றி மட்டும்
                  -- மன்னார் அமுதன்

வியாழன், பிப்ரவரி 28, 2013

நல்லுமரமும் ராசாதிண்ணையும்


பாட்டையா ஒரு
விதை விதைத்தார்
மந்தையில்

ஆலவிதையாயினும்
நல்லு மரமாய் வளர்ந்தது
பாட்டையாவின் பெயரோடு

ஊரார் ஓய்வெடுக்கவும்
ஒன்றுகூடவும்
உதவியது நல்லுமரம்

விழுதுதுகள் எழுகையில்
வயோதிபர்களின்
வேடந்தாங்கலாகியிருந்தது
அப்பா அதைச் சுற்றி
திண்ணை கட்டினார்

ஆடுபுலி ஆட
ஏதுவாயிருந்தது
ராசாதிண்ணை

ஆல் வேரற்றிருக்கையில்
நாகரிகம் அறிந்திருந்தேன்
நல்லுமரத்தை
விழுதுகள் தாங்கிக்கொண்டன

பாட்டையாயும் அப்பாவும்
பாரமாயிப் போயினர்
எனக்கு

இப்போதெல்லாம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
                  --மன்னார் அமுதன்





வெள்ளி, பிப்ரவரி 22, 2013

பேயோன்


தலைவலியோடு எழும்போதே
பேயைப் பற்றி
பேசிக்கொண்டிருந்தான்

கண்கள் சிவத்தும்
நரம்புகள் புடைத்தும்
அரற்றித் திரிந்திருக்கிறது பேய்

பேயடித்ததால்
வீங்கிக் கிடக்கிறது
சோற்றுப் பானையும்
மனைவியின் முகமும்

ஆறொன்று
ஓடி மறைந்த வடுவாய்
காய்ந்திருந்தது
பேய் கழித்த சிறுநீர்

வெட்டியெடுத்த மண்போட்டு
மறைக்கப்பட்டிருந்தது
அதன் வாந்தி

வந்ததற்கான
எல்லா அடையாளங்களையும்
விட்டே சென்றிருந்தது பேய்

அலங்கார அறையொன்றில்
பேயைக் காட்டுவதாய்
அழைத்தான்

அங்கு பேயுடைத்த
கண்ணாடிச் சில்லுகளில்
ஆயிரமாயிரமாய்த் தெறித்துக்கிடந்தது
எனது முகம்

  -- மன்னார் அமுதன்